முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய சாமியார்… கும்மி கொட்டி பாட்டுப்பாடி வழிபட்ட பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 5:39 pm
Quick Share

தூத்துக்குடி ; எட்டையாபுரம் அருகே கோவில் திருவிழாவில் முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய சாமியாரின் வீடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ளது புங்கவர் நத்தம் கிராமம். இங்குள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஒருவார காலம் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, ஜெயபால் என்பவர் சுடலை மாடசுவாமிக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கருவேலி முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறுவர். ‌ இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதே போல், இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான முள் படுக்கை அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவில் வாசலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது. முன்னதாக பத்ரகாளியம்மன் உச்சி மாகாளியம்மனுக்கு சுடலை மாடசுவாமி விரதம் மேற்கொண்ட ஜெயபால் சாமியார் சிறப்பு பூஜைகள் செய்தார். ஏராளமான பெண் பக்தர்கள் கும்மி கொட்டி பாட்டுப்பாடி வழிபட்டனர்.

சுவாமிகள் பூஜை செய்து, சாமியாரை முள் படுக்கைக்கு அழைத்து வந்தனர். அவர் முள் படுக்கையில் ஏறி நின்றபடி அருள் வந்து ஆடியபடியே சில பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார். இதனைக் காண சென்னை, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டையாபுரம் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.

Views: - 393

0

0