திமுகவுக்கு மக்கள் மூக்கணாங்கயிறு போடும் காலம் வந்து விட்டது : ஜனநாயக கடமையை ஆற்றிய ஓ.பி.எஸ் நெத்தியடி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 12:07 pm
OPS - Updatenews360
Quick Share

தேனி : பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்திருக்கும் எட்வேர்ட் நடுநிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தனது தாய் பழனியம்மாள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்தோடு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மேலும் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக கிருமி நாசினி, கையுறைகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகிய இடங்களில் அதிகப்படியான வெற்றியை அதிமுக பெறும் என்று கூறினார்.

ஆட்சிக்கு வந்து 10 மாதங்களாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத திமுக அரசு, முந்தைய அதிமுக அரசு அறிவித்த நலத்திட்டங்களையும் கிடப்பில் போட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் அதிமுக அதிகப்படியான இடங்களில் வெற்றி வாகை சூடும் என்றும்,முந்தைய அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை கிடப்பில் போட்ட திமுகவிற்கு பொதுமக்கள் மூக்கணாங்கயிறு போடும் காலம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

Views: - 667

0

0