NO சூடு No சொரணை… தேன்மொழி மனதை திருடிய மயில்சாமிக்கு ஆயுள் தண்டனை : நாளிதழ் போல திருமண பேனர் வைத்த மலைகிராம இளைஞர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 8:03 pm
News Invitation - Updatenews360
Quick Share

கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் நண்பருக்கு நடைபெற இருக்கும் திருமணத்திற்கு யூ-டியூப் சேனல் மற்றும் தினசரி நாளிதழ் போன்று வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர்கள் வைத்த மலைகிராமத்து இளைஞர்கள்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சுபநிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமான முறையில் பலரை கவரும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தற்போது பேஷனாக உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கிராமத்தில் நாளை மயில்சாமி என்பவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து இந்த மணமக்களை வாழ்த்தும் வகையில் அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் புதுமையான முறையில் யூ-டியூப் சேனல் மற்றும் தினசரி நாளிதழில் வருவது போன்று வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

இந்த பேனர்களில் மணமக்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு யூ-டியூப் சேனலில் அடுத்து வரும் வீடியோ பக்கங்களில் நண்பர்கள் புகைப்படம் மற்றும் வசனத்துடன் வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

இதே போன்று தினசரி நாளிதழ் போன்று திருமண நாளிதழ் என்றும் கலகலப்பு செய்திகள் எனவும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

வருகின்ற 12ஆம் தேதி நடைபெறும் மற்றொரு திருமணத்திற்கு வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் நித்தியானந்தா புகைப்படம் பொறிக்கப்பட்டு நோ சூடு,நோ சொரணை என்றும் மன்னவனூர் டு கைலாசா என்றும் கைலாச வாசிகள் என நண்பர்கள் புகைப்படங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கைலாச நாட்டில் உள்ள ஆசிரமத்தில் சேர விரும்புவோர்க்கு மூன்று நாட்கள் இலவச விசா மற்றும் தங்கும் இடம் உணவு இலவசம் என வாசகங்கள் இந்த பேனரில் இடம்பெற்றுள்ளது.

மன்னவனூர் மலைகிராமத்தில் வித்தியாசமான முறையில் வாசகங்கள் அடங்கிய திருமண வாழ்த்து பிளக்ஸ் பேனர்களை அப்பகுதியில் மலைகிராமத்து இளைஞர்கள் வைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் இந்த பிளக்ஸ் பேனர்களின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 1034

0

0