இறுதி அஞ்சலிக்காக சென்ற இளைஞர் பலி… உடல் வைக்கப்பட்ட ப்ரீசர் பெட்டியில் இருந்து பாய்ந்த மின்சாரம்.. விசாரணையில் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 2:30 pm
youth Dead - Updatenews360
Quick Share

திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை திருச்சினாங்குப்பம் சாலையை சேர்ந்த அபிநயா என்ற 16 வயது சிறுமி சென்னை காசிமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1படித்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக காதுவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்ற அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சை காரணமாகதான் அபிநயா உயிரிழந்தார் என்றும், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் உடலை வீட்டுக்கு கொண்டுவந்த குளிர்சாதன பெட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அருகில் மாணவியின் உறவினர்கள் சோகத்தில் அழுது கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அபிநயா உடல் வைக்கப்பட்டிருந்த குளிர் சாதன பெட்டியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகில் இருந்த அபிநயாவின் உறவினர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில், காசிமேட்டை சேர்ந்த அஜித் (வயது 19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், 2 பெண்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 312

0

0