அயர்ந்து தூங்கியதால் 50 சவரன் நகை அம்பேல்.. அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நடந்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 8:18 pm
Quick Share

கோவை : பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப் படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் பொள்ளாச்சியை அடுத்த நஞ்சேகவுண்டன் புதூரில் குடும்பத்துடன் தங்கி, தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரது மகள் பூப்பெய்ததற்கான நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனியில் நடைபெற்றது. இதற்கென சரவணகுமார் தனது மனைவி ஜெயச்சந்திரா, மகள் மற்றும் உறவினர்களுடன் பழனிக்கு சென்றார். அது சமயம் வீட்டைப் பார்த்துக்கொள்ள தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை வீட்டுக் காவலுக்கு பணியமர்த்திவிட்டுச் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் காவலாளி கோவிந்தராஜ் அருகே புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது சரவணகுமார் வீட்டின் கதவுகள் கடப்பாறையால் நெம்பப்பட்டு கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகவலறிந்து சரவணகுமார் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சுமார் 50 பவுன் நகை, ரொக்கம் ரூ. 72 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 548

0

0