சொத்துக்காக தம்பியை அடித்துக் கொன்ற அக்கா… மாமா உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 10:45 am
Quick Share

திருவள்ளூர் : சோழவரம் அருகே சொத்துக்காக தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (41) திருமணமாகாதவர். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்த பூபாலன், கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் அவரது தாயார் நீலம்மாலுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவரது அக்காவான தனலட்சுமிக்கும், இவருக்கும் அவ்வப்போது சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவரது வீட்டின் அருகே சுமார் 4 சென்ட் இடத்திற்காக அவ்வப்போது இருவருக்கும் தகராறு நடந்து வந்துள்ளது. பூபாலன் தனது அக்கா கணவர் ரவியை அரிவாளால் வெட்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார்.

இதன் காரணமாக, முன் விரோதம் இருந்து வந்த நிலையில் தலையில் காயங்களுடன் பூபாலன் இறந்து கிடந்தது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பூபாலன் அக்கா தனலட்சுமி குடும்பத்தினர் பூபாலனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல், வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியதும், இதனால் பூபாலன் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து பூபாலனை அடித்து கொன்ற அக்கா தனலட்சுமி, அவரது கணவர் ரவி, மகன் வல்லரசு, மகள்கள் வெண்மதி, மஞ்சு உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துப் பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக சொந்த தம்பியை, அக்கா, தனது கணவர், மகன், மகள்கள் ஆகியோருடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 710

0

0