திருமணத்திற்கு சென்ற இளைஞர் வெட்டிக்கொலை : உயிர்தப்பிய நண்பன்… திட்டமிட்ட கொலையா..? போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
1 September 2022, 11:24 am
Quick Share

திருவள்ளூர் : திருமணத்திற்கு சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் என்பவர் மகன் ராபின் (23). இவர் தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, விவேகானந்தா பள்ளி அருகே உள்ள வேகத்தடை அருகே அவரை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி, அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். நிலைகுலைந்து போன ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,ராபின் உடன் சென்ற கமல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமணத்திற்கு சென்ற நண்பர்கள் யார்…? அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா..? அல்லது முன் விரோதம் காரணமாக இவரை கொலை செய்தனரா…? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் கொலை கும்பலை தேடி வருகின்றனர்.

Views: - 471

0

0