ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி செயலரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்..!!

Author: Babu Lakshmanan
11 May 2022, 8:43 am
Quick Share

திருவாரூர் : குடவாசல் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரபாண்டியம் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருபவர் ராமையா மகன் குமார்(48). அந்த ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான தொகை 6 தவணையாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த விக்கிரபாண்டியம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீராசாமி மகன் குமார் என்பவரிடம், ஊராட்சி செயலர் குமார் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற ரூ 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த லஞ்சப் பணத்தை கொடுக்க தாமதப்படுத்தியதன் காரணமாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் காளியம்மன் கோவில் தெரு குமாரின் பெயர் விடுபட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரை குமார் அணுகினார். தன்னிடம் லஞ்சம் கேட்டு கொடுக்காத காரணத்தால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தன்னை  சேர்க்காமல் புறக்கணித்து வருவதாக புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் திட்டப்படி, பத்தாயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு குடவாசல் ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் குமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை உச்சரிப்பு காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.அதனை ஊராட்சி செயலர் குமார் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக குமாரை பிடித்தனர். அவரிடமிருந்த 10,000 ரூபாய் லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர் இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி நந்தகோபால் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

Views: - 932

0

0