பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை : திருவாரூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 12:01 pm
Quick Share

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த லாரி டிரைவர் வேலுசாமி என்பவரின் மகள் காயத்ரி என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று, கடந்த நான்கு வருடங்களாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார்.

இவர் பயிற்சி மருத்துவர்களுக்கான விடுதியில் 38வது எண் கொண்ட அறையில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவர் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, காயத்ரி இரண்டு நாட்களாக பணிக்கு வராதது குறித்து கேட்பதற்காக அதே விடுதியைச் சேர்ந்த அவரது தோழி ஒருவர் காயத்ரிக்கு போன் செய்தார்.

ஆனால், அவர் போனை எடுக்காத காரணத்தினால் கதவைத் தட்டியுள்ளார். கதவும் திறக்கப்படாததால் வாட்ச்மேன் மற்றும் இதர பயிற்சி மருத்துவர்கள் சேர்ந்தது கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் நைலான் கயிறு மூலம் காயத்ரி தூக்கில் தொங்கி உள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, திருவாரூர் தாலுகா காவல்துறையினர் காயத்ரி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயத்ரி கடந்த ஆறு மாத காலமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதன் காரணமாக அவருக்கு துணையாக அவரது அக்கா வந்து விடுதியில் 2 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இது குறித்து அதே விடுதியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களிடம் டி.எஸ்.பி சிவராமன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி அறையில் பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 621

0

0