பாஜக புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பேனர்கள் கிழிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு… போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
11 March 2023, 8:37 am
Quick Share

தூத்துக்குடி ; பாரதிய ஜனதா கட்சி புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் டிஜிட்டல் பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சங்கரபேரி மச்சாது நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 10சட்டமன்ற தொகுதிளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது தமிழகத்தில் 25 நாடாளுமன்ற இடங்களில் வெற்றிபெறும் நோக்கில் பணியாற்றி கொண்டு இருப்பதாக கூறிய அவர், திமுக ஆட்சியை தடுக்க யாரும் சதி செய்யவில்லை என்று கூறினார்.

திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது பாரதிய ஜனதா கட்சியினர் வைத்து டிஜிட்டல் பேனர்களை மர்மநபர்கள் கிழித்துச்சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

குறிப்பாக டிஜிட்டல் பேனரில் தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் படத்தை மட்டும் மர்ம நபர்கள் குறிவைத்து வெட்டிச்சென்றதால் பரபரப்பு காணப்பட்டது. டிஜிட்டல் பேனர்களை கிழித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 245

0

0