பாஜக நிர்வாகியின் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டும் காவல்துறை : பாஜக விடுத்த எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 5:37 pm
Quick Share

தூத்துக்குடி பாஜக நிர்வாகி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட நகர்வை நோக்கி பாஜக செல்லும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள், பாஜக அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் கடந்த 1வார காலமாக பெட்ரோல் குண்டுகள் வீசுதல், தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்பினை ஆய்வு செய்து மாநில தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, கன்னியாகுமரி மற்றும் மதுரை பெருங்கோட்டத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன். பால கணபதி, மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் மாணிக்கம் ஆகியோர் சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில், தூத்துக்குடியை சேர்ந்த பாஜக ஓ.பி.சி அணியின் மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ்-க்கு சொந்தமான தனியார் பேருந்து தூத்துக்குடியில் நேற்று முன் தினம் பயணிகளுடன் புறப்பட்டு செல்லும் போது பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு அதிர்ஷ்டவசமாக பஸ் மீது படாததால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இது பாரதிய ஜனதா கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அக்குழுவினர் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம், ரமேஷ் வீட்டில் அவருடன் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், மாநில பொது செயலாளர் பொன். பால கணபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தினங்களுக்கு முன்பாக பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் அவர்களுடைய டிராவல்ஸ் நிறுவனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் கூட தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் 30 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து மீது அப்பயணிகளின் உயிரையெல்லாம் மதிக்காமல் அவர்களை தாக்கும் நோக்கத்திலே இந்த பெட்ரோல் குண்டானது வீசப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகள் நேரடியாக பாலத்தில் இருந்து அந்த வெடிகுண்டை வீசி இருக்கிறார்கள். இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் சிசிடிவி கேமரா எல்லாம் பயன்படுத்தி சுலபமாக கண்டுபிடிக்கப்பட வேண்டிய சமயத்தில் தீவிரவாதி இன்று வரைக்கும் வெளியில் உலாவி கொண்டிருப்பது ரொம்ப ரொம்ப ஒரு மோசமான விஷயம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இதுவரை நடந்தது கிடையாது. காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும், துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த தீவிரவாதிகளை கைது செய்தால், இனி இச்சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்காது. ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டுள்ளனர்.

சிசிடிவி கேமரா மூலம் தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடித்து இருக்கிறார்களா..? என்று கேட்டால் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால், அடுத்த கட்ட நகர்வை நோக்கி பாரதிய ஜனதா கட்சி செல்லும். சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய விஷயத்தை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்றால், எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கின்றது என்று பலத்த சந்தேகம் வருகிறது.

மேலும், இவர்கள் தீவிரவாதிகளோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக கூறினார். இந்த ஆய்வின் போது, பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணை தலைவர் சிவராமன், வாரியார், தங்கம் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Views: - 313

0

0