நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்த சிறுவன் : வாட்ஸ்அப் வீடியோ வைரலான நிலையில் இருவர் கைது

Author: Babu Lakshmanan
26 July 2022, 7:12 pm
Quick Share

தூத்துக்குடி : தூத்துக்குடிஅருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் வாட்ஸ் அப்பில் பரவிய வைரல் வீடியோ மூலம் கண்டுபிடித்து கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிலரது செல்போன் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் ஒரு குளத்தின் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு, அது பலத்த சப்தத்துடன் வெடிக்கும் காட்சி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரகாஷ்நகர் குளத்தின் அருகே அந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு, அங்கேயே வீசி வெடிக்க வைத்து இருப்பதும், இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது இரண்டு பேர்கள் என தெரியவந்தது.

இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு 16 வயது சிறுவன் பட்டாசில் உள்ள மருந்தை எடுத்து நாட்டு வெடிகுண்டு போன்று தயாரித்து, வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது. இதனை அவரது நண்பர் குரும்பூரை சேர்ந்த முருகபெருமாள் (வயது 23) என்பவர் வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் முருகபெருமாள் மற்றும் சிறுவனையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Views: - 452

0

0