இ-சேவை மையம், ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. தூத்துக்குடியில் பரபரப்பு ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
15 May 2023, 1:26 pm
Quick Share

தூத்துக்குடியில் இ-சேவை மையம் மற்றும் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தனவீரபாண்டியன். இவர் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் பகுதி தலைவராக இருந்து வருகிறார். இவரது மகன் சரவணபிரபு(29). இவர் திருச்செந்தூர் பிரதான சாலை முத்தையாபுரம் தெற்கு தெருவில் இ-சேவை மையம் மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

கடைக்கு பக்கத்தில் கடை நடத்தி வருபவர் ஷேக்முகமது. இவருக்கும், சரவணபிரபுவுக்கும் நிலம் சம்பந்தமாக கடந்த 2005 முதல் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் முன் பகை காரணமாக, ஷேக்முகமது சரவணபிரபுவின் கடையில் பெட்ரோல் குண்டுவீச முடிவு செய்து, நேற்று முன்தினம் இரவு தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்பி உள்ளார்.

அவர் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசுகிறார். இந்தக் காட்சி அருகில் இருந்த கடையில் பொருத்தப்பட்டு இருக்கக்கூடிய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பெட்ரோல் குண்டு பட்டு கடை முன்பு இருந்த விறகுகள் தீ பற்றி எரிந்துள்ளது. கடை ஷட்டர் பகுதியில் தீபட்டு உடனே அணைந்து விட்டதால் பெரிய அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து சரவணபிரபு அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், மகாராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ஷேக்முகமதுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

Views: - 330

0

0