அரசுக்கு சொந்தமான மின்வயர்கள் திருட்டு.. திமுக நிர்வாகி உள்பட 6 பேரை கைது செய்து சிறையிலடைப்பு… 2.5 டன் காப்பர் வயர்கள் பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 7:42 pm
Quick Share

வெங்கல் சுற்று வட்டார பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மின்வயர் திருடு போன வழக்கில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே கீழானூர் துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு துணை நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பிகள் திருடு போனது.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உயர் அழுத்த மின் வயர்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும்.

இந்நிலையில்,நேற்று வெங்கல் காவல் நிலைய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது, மின் கம்பிகள் திருட்டு சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் (வயது35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

எனவே, அவரை போலீசார் பிடித்து வந்து வெங்கல் காவல் நிலையத்தில் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில், அலெக்ஸ், தனது நண்பர்களான ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(வயது 25), எழிலரசன் என்ற சுனில் (வயது 21), பிரவீன் குமார் (வயது 33), சித்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பரத்குமார் (வயது 20), முகேஷ்குமார்(வயது 24) என மொத்தம் ஆறு பேர் மின் வயர்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.

எனவே, அவர் கொடுத்த தகவலின் படி 2600 கிலோ அலுமினிய மின்கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் அனைவரையும் புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மின் வயர் திருட்டில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும், சித்தம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 253

0

0