தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு கத்தி குத்து… முகமுடி கொள்ளையன் கைவரிசை.. 17 சவரன் நகை அபேஸ்!!

Author: Babu Lakshmanan
23 January 2023, 9:18 pm
Quick Share

திருவள்ளூர் : ஆரணி அருகே மல்லியங்குப்பம் கிராமத்தில் இளம்பெண்ணை கத்தியால் வெட்டிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்த முகமூடி அணிந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (30). காய்கறி வியாபாரம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மாலதி (26). இன்று காலை கணவர் உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்றுள்ளார். மாலதி வீட்டில் தனியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த முகமூடி அணிந்த மர்ம நபர் மாடியின் வழியாக வீட்டின் உள்ளே நுழைந்துள்ளார். தனியாக இருந்த மாலதி அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மாலதி நகைகளை கொடுக்க மறுத்ததால், மர்ம நபர் இளம் பெண்ணை சரமாரியாக கத்தியால் கை, கால்களில் வெட்டியுள்ளார். அவரிடம் தாலிசங்கிலி கம்மல் ஆகியவற்றை பறித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட இளம் பெண் காப்பாற்றுங்கள் என அலறியபடியே வெளியே ஓடிவந்துள்ளார்.

இதனிடையே, மர்ம நபர் பீரோவை திறந்து, அதிலிருந்து தங்க நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து விட்டு, வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

மாலதியின் அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மாலதியை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மொத்தமாக, 17 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு முகமூடி அணிந்த நபர் தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

மாலதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் பள்ளிக்கு சென்று இருந்த நிலையில், வீட்டில் அவர் மற்றும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, மர்ம நபர் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், அவரை வெட்டி விட்டு பணம் மற்றும் நகையை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 276

0

0