மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களின்றி இன்று சூரசம்ஹாரம்…!!
20 November 2020, 1:48 pmகோவை: மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகபெருமானின் 7வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்தசஷ்டி விழா கடந்த 15ம் தேதி தொடங்கி, தினமும் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து கோவில் நடை 5.30 மணிக்கும் திறக்கப்பட்டது. பின்னர் பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் 6ம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும், 9 மணிக்கு யாகசாலை பூஜையும் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு இடும்பன் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மதியம் 3 மணியளவில் சுப்பிரமணியசாமி பச்சை நாயகி அம்மன் சன்னதியில் அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி, இதையடுத்து வீர நடன காட்சி நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து சுப்பிரமணியசாமி வேலை பெற்றுக்கொண்டு சூரசம்ஹாரத்திற்கு ஆட்டுக்கிடா வாகனத்திலும் வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளி முதலாவதாக தாரக சூரனையும், இரண்டாவதாக பானுகோபன் வதம், மூன்றாவதாக சிங்கமுகாசுரன் வதம், நான்காவதாக சூரபத்மன் வதம் ஆகியவை நடக்கிறது. பின்னர் வெற்றி வாகை சூடுதல், சேவல் கொடி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 4.30 மணி அளவில் சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானின் கோபத்தை தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடக்கிறது.
வழக்கமாக சூரசம்ஹார விழா நடைபெறும் நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மருதமலைக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் நேரமான மதியம் 1 மணி முதல் 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0
0