சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டல்… வசமாக சிக்கிய பால் வியாபாரிகள்… விசாரணையில் வெளியான தகவல்..!!

Author: Babu Lakshmanan
21 April 2022, 2:20 pm
Quick Share

மதுரை – திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் துப்பாக்கியை காட்டி டோல்கேட் ஊழியர்கள் மிரட்டிய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து அவர்கள் வந்த கார் மற்றும் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் இச்சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சர்ச்சைக்கு பெயர் போன கப்பலூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சிவகுருநாதபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (38). அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் (34), பொன்ராஜ் (28) மூவரும் பால் வியாபாரிகள்.

பொன்ராஜ் பால் வியாபாரியாகவும், ஓட்டுனராகவும் இருப்பதால், ஜெயக்குமார் தான் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு தோட்டாக்கள் வாங்க நண்பர்களை அழைத்துக்கொண்டு சுரண்டையில் இருந்து மதுரை நோக்கி சென்றுள்ளார். வாகனம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் கடக்க முயன்றபோது சுங்கக்கட்டணம் கேட்டு ஊழியர்கள் காரை நிறுத்தி உள்ளனர்.

நான்காவது பாதை பாஸ் டேக் பாதை என்பதால் அங்கிருந்த தடுப்பின் அருகே காரை நிறுத்தி உள்ளனர். இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் காரின் எண் பதிவாக வேண்டும். இதனால் காரை சற்று பின்னோக்கி எடுங்கள் என கூறியுள்ளனர். இதற்கு காரை எடுக்க முடியாது என டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், திடீரென தனது கையில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து காரை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், கப்பலூர் தொழிற்பேட்டையில் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் நிறுத்தி துப்பாக்கி எடுத்தது மிரட்டியது தவறான செயல் என உடன் வந்த பொன்ராஜ் தெரிவித்து காரை அங்கேயே நிறுத்தி மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் டோல்கேட் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். வாகன எண்ணையும் பதிவு செய்து மதுரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் போலீசார் சென்ற போது, குறிப்பிட்ட அந்த எண்ணுடைய கார் கப்பலூர் தொழிற்பேட்டை டீக்கடை அருகே இருப்பதைக்கண்டு மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூவரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாகவும், தனது அண்ணன் மகளுக்காக துப்பாக்கிப் பயிற்சி கொடுப்பதற்காக வாங்கி வைத்த பொம்மை துப்பாக்கிக்கு தோட்டா வாங்க மதுரை சென்றதாகவும், அதை காண்பித்து டோல்கேட் ஊழியர்களை விளையாட்டாக மிரட்டியதாகவும் ஜெயக்குமார் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் வந்த பொலிரோ காரையும் பறிமுதல் செய்து துப்பாக்கிகள் உண்மையான துப்பாக்கியா? அல்லது விளையாட்டுத் துப்பாக்கியா? என அவர்கள் கொண்டுவந்த கைத்துப்பாக்கி மற்றும் ஏர்கன் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திருச்சி நோக்கி சென்ற குற்றவாளிகள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது போல, நேற்று இரவு சுங்க கட்டணம் செலுத்திய பின்னர் துப்பாக்கியை காட்டி டோல்கேட் ஊழியர்களை மிரட்டிய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 697

0

0