மாஸ்டர் பட பாணியில் நடந்த அதிர்ச்சி… போதை மறுவாழ்வு மையத்தில் சித்ரவதை..? பள்ளி மாணவன் மர்ம சாவு..!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 4:27 pm
Quick Share

திருவள்ளூர் அருகே ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலையில் போதை மறுவாழ்வு மையத்தில் 15 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மெதிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அகிலா என்பவரது மகன் 15 வயதான மனோஜ் குமார் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவன் மனோஜ் குமார் பெற்றோர் கூறுவதை கேட்காமல் படிக்காமல் இருந்துள்ளார்.

இதனால், மனம் வெதும்பிய அகிலா கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கத்தில் வசிக்கும் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் 40 நாட்கள் தங்கி இருக்கக்கூறி உள்ளார்.

அவர் தங்கி 11 நாட்கள் ஆன நிலையில் திடீரென அவர் உயிரிழந்ததாக அகிலாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. ஜனப்பன் சத்திரத்தில் உள்ள மையத்தில் வந்து இது குறித்து விசாரித்ததில் உயிரிழந்த சிறுவனின் தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் தழும்புகளுடன் காயம் உள்ளதால் தனது மகன் உயிர் இழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் ‘எ பெஸ்ட் கேர் பவுண்டேசன்’ எனப்படும் தங்கும் விடுதி எனக்கூறி, போதை மறுவாழ்வு மைய விடுதியில் தங்க வைத்து அவரை அடித்துக் கொலை செய்துள்ளதாகவும், இதற்கு தகுந்த முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பி வைத்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா மற்றும் மது போதையில் சிக்குபவர்களை அதில் இருந்து மீட்க தங்க வைக்கக்கூடிய அந்த மையத்தில் 15 வயது 7ஆம் வகுப்பு பள்ளி மாணவனை அங்கு தங்க வைத்து 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், உயிரிழப்புக்கு காரணமான மைய உரிமையாளர் கும்மிடிபூண்டி ஆத்துபாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மையத்தில் தங்கியுள்ள 15க்கும் மேற்பட்டவர்களிடம் அங்குள்ள நிர்வாகிகளிடம் போலீசார் சிறுவன் உயிர் இழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்கி உள்ளவர்கள் பலர் தங்களை அடிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவர் எப்படி உயிரிழந்தார் என்ற முழு விவரங்கள் தெரியவரும் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 327

0

0