தொடர் விடுமுறையால் 3வது நாளாக குவிந்த சுற்றுலா பயணிகள் : சூரிய அஸ்தமனத்தை காண அலைமோதிய கூட்டம்..திணறிய குமரி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 8:47 pm
Kumari Crowd - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பண்டிகை கால தொடர் விடுமுறை எதிரொலியால் குமரியில் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கம கடற்கரையில் குளித்து விட்டு, பகவதி அம்மனை தரிசனம் செய்வர். மேலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து ரசித்துவிட்டு செல்வது வழக்கம். 

இந்தநிலையில் தமிழ் புத்தாண்டு,சித்ரா பவுர்ணமி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

காலையில் சூரிய உதயத்தை காண ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர். பின்னர் கடலில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகு போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பே சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

படகு போக்குவரத்து தொடங்கியவுடன் உற்சாக படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.

மாலையில் சூரிய அஸ்தனமனத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமம், சன் செட் பாயின்ட் ஆகிய பகுதிகளில் குவிந்தனர். அவர்கள் கடலில் குளித்தும்,கடல் அழகை ரசித்தவாறும் உற்சாகமாக சூரிய அஸ்தனமனத்தை கண்டு ரசித்தனர்.

பயணிகள் கூட்டம் அலை மோதியதால் முக்கடல் சங்கமம், கடற்கரைசாலை,சன்னதிதெரு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும்,பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 727

0

0