நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க வந்த போது சோகம் : முக்கொம்பு அணையில் பிளஸ் 2 மாணவன் நீரில் மூழ்கி பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 9:25 pm
Trichy Student Dead - Updatenews360
Quick Share

திருச்சி முக்கொம்பு சென்ற பள்ளி மாணவர் காவிரியில் குளித்த போது நீரில் முழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 16பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகலில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.

மேலும் தற்போது காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து இருப்பதால் குளிப்பதற்கு திட்டமிட்ட மாணவர்கள் ஒன்றாக காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

இதில் எதிர்பாராத விதமாக கௌதம் என்கிற மாணவன் ஆழமான பகுதியில் சிக்கினார். அப்போது செய்வதறியாது திகைத்த சக மாணவர்கள் கௌதமை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதனை அடுத்து கூச்சலிடவே … அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர் – அப்போது நீரில் மூழ்கி கௌதமன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

தொடர்ந்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மரக்கடை ஜீவா நகரை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கௌதம் தெப்பக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

விடுமுறை நாட்களில் ஆறு ஏரி போன்ற இடங்களில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து குளிப்பதற்காக ஆவலுடன் செல்லும்போது இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது.

Views: - 586

0

0