ஜெயலலிதா குறித்து இழிவான பேச்சு.. தஞ்சை மேயரை கண்டித்து திருச்சி மாமன்றக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள்!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 3:39 pm
Quick Share

திருச்சி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி மேயர் மற்றும் திமுகவினரை கண்டித்தும், திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சி அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா தனுஷ் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை கொண்ட மாமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள்.

இன்று துவங்கிய இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பேச வாய்ப்புக் கேட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்தனர். இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் புகார் தெரிவித்தும், அவர் திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பேசி அதிமுக உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்தார்.

இதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் திருச்சி மாநகராட்சி மேயரை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து, திமுகவினரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து மாமன்ற மாண்பையும் மீறி இழிவாக பேசியதை கண்டித்தும், திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்காமல் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி அதற்கு உறுதுணையாக இருக்கும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினரை கண்டித்தும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.

Views: - 509

1

0