விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்த சம்பவம்… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கல்லூரி மாணவி… உறவினர்கள் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
23 May 2022, 5:14 pm
Quick Share

திருச்சி : மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்ட உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் உறவினர்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (19). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி வித்யாலட்சுமி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக பிளக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த மூன்று நபர்கள் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாகவும், இதனால் தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது தாய் சாந்தி பெல் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிந்து மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக, பெல் போலீசாரை கண்டித்து உடலை வாங்க மறுத்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். மாணவியின் உறவினர்களிடம் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 621

0

0