தாயே பேயாக வந்து தொல்லை… பல நாட்களாக பட்டினியில் பட்டதாரி மகள்… பகீர் கிளப்பிய சம்பவம்… அச்சத்தில் கிராம மக்கள்..!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 5:10 pm
Quick Share

திருச்சி அருகே பில்லி, சூனியம் வைத்து விட்டதாகவும் அம்மாவே பேயாக வந்துள்ளதாக கூறி பட்டதாரி பெண் உள்பட இருவர் பல நாட்களாக உணவு உண்ணாமல் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்திக்குள்ளாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியமாள் (55). இவரது அக்கா சவரியம்மாள் மகள் மார்க்கிரேட் (30). பி.எஸ்.இ., பி.எட் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மார்க்ரேட்டின் தாயார் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்ட நிலையில், மார்க்கிரேட் தனது சித்தி தாயாரான ஆரோக்கியமாளுடன் தனது வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் வீட்டில் பேய் இருப்பதாகவும், மார்க்கிரேட்டின் தாயார் சவரியம்மாளே பேயாக வந்துள்ளதாகவும், பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் கூறி, வீட்டில் இருந்த பொருட்கள் பலவற்றையும் எடுத்து வெளியில் ஒரு பகுதியில் வீசி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆரோக்கியமாள், மார்க்கிரேட் இருவரும் வீட்டிற்குள் இல்லாமல் வீட்டிற்கு வெளியே ஒரு தாழ்வான பகுதியில் தங்கி இருந்தனர்.

கடந்த சில தினங்களாக சாப்பிடாமல் படுத்தே இருந்துள்ளனர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்பதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுபற்றிய தகவலை அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர்.

தகவலின் பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மார்க்கிரேட் வீட்டிற்குள் நுழைந்த போது, வீட்டில் எந்த பொருளும் இல்லாது இருப்பதைக் கண்டதுடன், வீட்டினுள் ஆங்காங்கே மஞ்சள் தடவிய தேங்காய், எலுமிச்சம்பழம் உள்ளிட்டவையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் வீட்டின் பின்பகுதியில் உள்ள சிறிய இடத்தில் இருவரும் படுத்தபடி இருந்தனர். இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியபோது தங்களுக்கு யாரும் தேவை இல்லை என்று அனைவரையும் அங்கிருந்து செல்லுமாறு ஆக்ரோஷமாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும் இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றபோது, இருவரும் வர மறுத்தனர். இன்னும் இரண்டு நாள் கழித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அவர்களது உறவினர் மரியஅருள் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மூலம் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெற்ற தாயே பேயாக வந்துள்ளதாக கூறி பட்டாதாரி பெண் மற்றும் தனது சித்தியுடன் நீண்ட நாட்களாக உணவருந்தாமல் இருந்த செயல் அனைவரையும் வேதனைக்கு ஆளாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 712

0

0