தகாத உறவால் கர்ப்பம்… தனக்கு தானே பிரசவம் பார்த்து முட்புதரில் குழந்தையை வீசிய தாய்.. மயங்கிய நிலையில் மீட்ட பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
27 May 2022, 4:53 pm
Quick Share

திருச்சி அருகே ஆற்றில் முட்புதரில் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண், பிறந்த குழந்தையை புதரில் வீசிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் அருகே மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுகுரல் சப்தம் வந்து கொண்டே இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்களின் காதில் விழவே, மக்கள் சென்று பார்த்த போது, பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குழந்தையை வீசிச் சென்ற தாய் யார் என்ற விசாரணை நடைபெற்று வந்த சிறிது நேரத்தில், ரத்தத்துடன் உடலில் காயங்களோடு அங்குள்ள கோவில் அருகே பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் தான் அந்த குழந்தையின் தாய் என்பது தெரியவந்தது. மணப்பாறை அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த 38 வயதான அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 8 வயதில் ஒரு மகள் இருப்பதோடு, கணவன் இறந்து விட்ட நிலையில் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். கள்ளத் தொடர்பில் குழந்தை உருவாகவே, வேறு வழியின்றி முட்புதரில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டு அருகில் உள்ள கோவில் வளாகத்திற்கு சென்று படுத்துக் கொண்டதும் தெரியவந்தது.

தாய் – சேய் இருவருக்கும் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. உடலில் தொப்புள் கொடியோடு ஈரம் கூட ஈஞ்சாமல் குழந்தை இருக்க ரத்தத்துடன் தாய் படுத்திருக்க யாருமின்றி முட்புதரில் நடந்த பிரசவ நிகழ்வு அனைவரின் நெஞ்சங்களையும் உருக்குலையச் செய்திருக்கின்றது.

கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

Views: - 884

0

0