ரூ.75 லட்சம் வீண் போகல… முயலை வேட்டையாடிய புலி… வனத்துறையினர் வெளியிட்ட வீடியோ..!!

Author: Babu Lakshmanan
22 June 2022, 11:44 am
Quick Share

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட புலி முயலை கவ்வி செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக உட்பட்ட முத்துமுடி பகுதியில் 8 மாத குட்டியாக புலி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நல்ல நிலையில் அது உள்ளது.

தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால் மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தனி கூண்டு அமைக்கப்பட்டு தற்போது 9 மாதங்களாக வனத் துறையினர் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் கூறினர்.

இந்த நிலையில், அந்தப் புலி முயலை வாயில் கவ்வி கொண்டு செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதனால், புலி வேட்டையாட பழகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த வீடியோவில், அடித்து வேட்டையாடும் காட்சி இல்லை. முயலை வாயில் கவ்வி செல்லும் காட்சிகள் மட்டுமே இதில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் பல மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Views: - 567

0

0