மோடி அரசியல் நமக்கும் மிகவும் சவாலானது.. திமுகவை எதிர்த்தால் சனாதனத்திற்கு துணை போவதற்கு சமம் : திருமாவளவன் பேச்சு!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 11:43 am
Quick Share

சென்னை : திமுகவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல என்றும், அது திரிபுவாதம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிபிசி தயாரித்த இந்தியா: மோடி என்கிற கேள்வி ஆவணப்படம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் திரையிடப்பட்டது.

விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆவணப்பட திரையிடல் நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலிபூங்குன்றன், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன், சிபிஐ -ன் வஹிதா நிஜாம், சிபிஎம்-ன் சாமுவேல் ராஜ், சிபிஎம்எல் -ன் பாலசுந்தரம் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “ஒரு விமர்சனம் வரும்போது விமர்சனம் செய்பவர்களை தேசவிரோதியாக பார்ப்பது பாசிசத்தின் உச்சம். அதையும் தாண்டி இந்த முயற்சியை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” எனக் கூறினார்.

திரைப்படம் பார்த்த பின்னர் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மேடையில் பேசியதாவது :- வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள மோடியிசம் bbc நிறுவனத்தால் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. குஜராத் வன்முறைக்கு பின்னால் சங்பரிவார் அமைப்புகளும், பாஜகவும் இருந்திருக்கிறது என்பது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்துள்ளார் மோடி. மீண்டும் ஒருமுறை மோடி பிரதமர் ஆனால், இந்த நாடு என்ன ஆகும் என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி.

சிலர் இதை கண்டுகொள்ளாமல் திமுக எதிர்ப்பையும், திராவிட கழக எதிர்ப்பையும், திராவிட அரசியல் எதிர்ப்பையும் செய்து கொண்டிருக்கிறார்கள். நம் முன்னால் மிக மிக சவாலாக இருப்பது மோடி அரசியல், சனாதன அரசியல். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மொழி வழி அரசியல் பெரிதாக பேசப்படுவதில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு அரசியல் வலுவாக இருக்கிறது.

காதல், மதமாற்றம், புனித பசு என்ற பெயரில் அவர்கள் செய்யும் வன்முறைகள் தான் மோடியை இந்த அளவிற்கு வலிமையாக உருவாக்கியுள்ளது. மதசார்பின்மை என்ற ஒற்றை வார்த்தைக்காக ஒருவர் முதன்முதலில் கொல்லப்பட்டார் என்றால், அது காந்தியடிகள் தான். அதனை செய்தது நாதுராம் கோட்சே கொண்ட சனாதன கோட்பாடு தான்.

சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாப்பது நம் முன்னால் பெரும் சவாலாக இருக்கிறது.
இந்துத்துவத்தை, சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியத்தின் அங்கம். திமுகவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல, அது திரிபுவாதம். அப்படி செய்வது சனாதனத்திற்கு துணை போவதற்கு சமம்.

பெரியாரை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல. சனாதனத்தை எதிர்ப்பது தான் தமிழ் தேசியம்.
மோடி என்பவர் தனிப்பட்ட நபராக சக்தியாக வளர்ந்து நிற்கிறார் என்று நாம் எண்ண வேண்டாம். மக்கள் விரோத சனாதன கோட்பாடு அவருக்கு பின்னால் இருக்கிறது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 355

0

0