மரத்தில் மோதி தனியார் கல்லூரி பேருந்து விபத்து… 21 மாணவிகள் படுகாயம்.. 2 பேருக்கு கால்முறிவு..!!

Author: Babu Lakshmanan
6 May 2022, 2:23 pm
Quick Share

விருதுநகர் : சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து 21 மாணவிகள் காயத்துடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பேருந்தினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார்.

கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் கல்லூரி பேருந்து சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி வந்து கொண்டிருந்த போது, பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.

பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவிகளை மீட்டு விபத்தில் காயமடைந்தவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த பிரியா, மஞ்சளா, கெளரி , முத்தீஸ்வரி, அபர்னா, ஸ்வேதா உள்ளிட்ட 7 மாணவிகள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சாத்தூர் நகர் காவல் காவல் நிலைய ஆய்வாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 696

0

0