அடுத்தடுத்து இரண்டு மாவட்டங்களுக்கு விசிட் : தூத்துக்குடியை தொடர்ந்து கன்னியாகுமரியில் ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2022, 5:30 pm
Kumari STalin - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி வருகிறார். அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு தூத்துக்குடியில் தங்குகிறார். நாளை காலையிலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு காரில் குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2 மணிக்கு வந்து சேருகிறார். அவரை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட பொறுப்பாளரும், மேயருமான மகேஷ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். 

இதைதொடர்ந்து மாலை 4 மணிக்கு நாகர்கோவில் வெட்டூர்ணிமடம்-பள்ளி விளை சாலை மற்றும் டெரிக் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். 

தொடர்ந்து பேயன்குழி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து சீர மைக்கப்பட்ட கால்வாய் உடைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் குமாரகோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து சீரமைக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.  

பின்னர் மாலை 5 மணிக்கு மதுரை புறப்பட்டு செல்கிறார்.  முதல்-அமைச்சர் வருகையை அடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் வருகை தொடர்பான முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் வருகையை அடுத்து குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தென்மண்டல ஐ.ஜி. அன்பு குமரி மாவட்டம் வந்தார். அவர் மாவட்டம் முழுவதும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற் கொண்டார்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுடன் ஆலோசனை நடத்தினார். முதல் – அமைச்சர் வருகையை அடுத்து குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.முதல்-அமைச்சர் வருகையை அடுத்து நாகர்கோவில் சுற்றுலா மாளிகை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 

முதல்-அமைச்சர் வருகையின்போது குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 1136

0

0