போன வருஷம்தான் கட்டுனாங்க… இப்பவே தண்ணீர் கசியுது… உயிர்பலி அச்சம் தெரிவிக்கும் ஆசூர் பகுதி மக்கள்…!!!

Author: Babu Lakshmanan
14 July 2022, 10:04 am
Quick Share

21 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த வருடம் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் முழுவதும் கசிவதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது என பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்துக்கு உட்பட்ட ஆசூர் பஞ்சாயத்தில் , காலனி பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றது. இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடித்தண்ணீர் தட்டுப்பாடு நிலவியதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் 21 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதியதாக கட்டப்பட்டது.

சமீப நாட்களுக்கு முன்னர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது. அதில் நீர் ஏற்றும் போதே அனைத்து நீர்களும் கசிந்து மள மளவென நீர் வெளியேறுவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த வருடம் இந்த மேல்நிலை நீர்த்தக்க தொட்டி கட்டினார்கள். கட்டும்போதே சரியான கடைக்கால் எடுக்காமல் ஏனோ தானோ என்று கட்டினார்கள். அதேபோல் தூண்கள் தரமற்றவையாக கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டிருந்த நிலையில் கட்டினர்.

கட்டுமானம் நடக்கும் போதே இங்குள்ள இளைஞர்கள், ஏன் இந்த அளவுக்கு தரமற்ற முறையில் இதை கட்டுகின்றீர்களே என கேட்டதற்கு, நாங்கள் நன்றாக கட்டுவோம். அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்கள். அதை நம்பி அப்பகுதி மக்கள் அமைதி காத்தனர்.

பணி நடக்கும்போதே சரியான கடைக்கால் எடுக்காமலும், தரமற்ற தூண்கள் அமைக்காததாலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் இணைப்பு பகுதியில் தரமான சிமெண்ட் கலவை வைத்து பூசாததாலும் , “மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றும் போதே அனைத்து நீர்களும் வெளியேறியதை” கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியுற்றோம் , மக்கள் வரிப்பணம் 21 லட்சம் ரூபாயை சூறையாடிவிட்டார்கள் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் இது இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதன் பக்கத்திலேயே ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் போன்றவை உள்ளதால் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை முழுவதுமாக இடிக்க வேண்டும், என கூறினர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் ,வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் தெரிவித்தும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆதங்கப்படுகின்றார்கள். தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து தள்ளிவிட்டு புதியதாக கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து அப்பகுதியை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட பெண்கள் நீர்த்தேக்க தொட்டி முன்பு நின்ற சுமார் ஒரு மணி நேரமாக கோஷமிட்டனர்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு தரமான உறுதியான மேல்நிலை நீர்த்தக்க தொட்டியை கட்டித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றன. மேலும் காலதாமம் செய்யாமல் இந்த பணியை தொடங்கினால் தான் மூன்று வருட காலமாக தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள் குடித்தண்ணீர் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். காலதாமதம் செய்தால் அனைத்து மக்களும் ஒன்று கூடி பெரிய போராட்டம் நடத்தப்படும், என மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

Views: - 567

1

0