எங்களுக்கு மட்டும் பாகுபாடு.. கோவை ஆட்சியரை மாத்துங்க.. அவரு இருந்தா நாங்க குறைதீர் முகாமில் பங்கேற்க மாட்டோம் : விவசாய சங்கம் முடிவு…!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2022, 2:46 pm
Cbe Farmers Association -Updatenews360
Quick Share

கோவை : இந்த மாவட்ட ஆட்சியர் இருக்கும் வரை விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்க மாட்டோம் என குறைதீர் முகாமை வெளிநடப்பு விவசாய சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்கங்கள் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை மனுவாகவும் நேரடியாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினருக்கு அவர்களது கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இச்சங்கத்தினர் வெளி நடப்பு செய்தனர்.

இது குறித்து அச்சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் கந்தசாமி, சென்ற மாதம் 1000 விவசாயிகள் தனிதனியே மனு அளித்த நிலையில் அதற்கான தீர்வு காணப்படவில்லை என இன்று கூட்டம் ஆரம்பிக்கும் போதே தெரிவித்ததாகவும், இந்த மாவட்ட ஆட்சியர் கிடப்பில் கிடக்கும் மனுக்களை படிப்பதே இல்லை என குற்றம் சாட்டினார்.

இது குறித்து கேட்கும் போது மாவட்ட ஆட்சியர் தங்களை வெளியில் செல்லுமாறு கூறியதாக தெரிவித்தார். மேலும் இந்த மாவட்ட ஆட்சியர்(சமீரன்) இருக்கும் வரை தாங்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை எனவும் நேரடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டே தீர்வு காண இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தங்கள் சங்கத்தை மட்டும் இவ்வாறு செய்வதாகவும் தெரிவித்தார். ஒரு சில நேரங்களில் மட்டும் எங்கள் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு தேவைப்பட்டதாகவும் ஆனால் இன்று இவ்வாறு அவர் கூறியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். என்ன ஆனாலும் விவசாயிகளுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என தெரிவித்தார்.

Views: - 539

0

0