தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் எங்கடா? தனியார் உணவகத்தில் ரகளை : கடை ஊழியர்களுடன் மல்லுக்கட்டிய வாடிக்கையாளர்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 4:03 pm
Hotel Fight - Updatenews360
Quick Share

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் வழங்காததால் கடை பணியாளர்களுக்கும் உணவு அருந்த வந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் கசாலி என்ற உணவு விடுதி உள்ளது. இந்த உணவு விடுதியில் நடைபெற்ற சண்டை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக கடை ஊழியர்களுக்கும் உணவருந்த வந்தவர்களுக்கும் இடையே இந்த சண்டை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

கடைக்கு உணவு அருந்த வந்த மணிகண்டன், சிவபெருமாள் என்ற இருவரும் கால் கிலோ என்ற அளவில் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். கால் கிலோ அளவில் தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கடை ஊழியர்கள் அரை என்ற அளவில் தந்தூரி சிக்கன் வாங்கினால் மட்டுமே அதற்கு மயோனைஸ் தரப்படும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் தராத நிலையில் கடை ஊழியர்களுக்கும் உணவருந்த வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உணவருந்த வந்திருந்த சிவபெருமாள், மணிகண்டன் இருவரும் கடை ஊழியரை தாக்கியதாகவும், இதனையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் உணவருந்த வந்தவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் ஒருவரை ஒருவர் கையில் கிடைத்தவைகளைக் கொண்டு தாக்கிக் கொள்ளும் காட்சிகள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது.

தந்தூரி சிக்கனுக்கு மைனஸ் தராததால் ஏற்பட்ட மோதல் உணவு விடுதியை போர்க்களமாக மாற்றிக் காட்டி இருக்கிறது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 559

0

0