ரூபாய் 2 கோடி கடனை திருப்பி கேட்ட தேமுதிக நிர்வாகி : கூலிப்படை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்திய சகோதரர்கள்…

Author: kavin kumar
21 January 2022, 8:28 pm
Quick Share

திருச்சி : ரூபாய் 2 கோடி கடன் திருப்பி கேட்ட திருச்சி தேமுதிக நிர்வாகி மற்றும் சகோதரர் மீது கூலிப்படையினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கூலிப்படையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக பொருளாளர் லட்டு வைத்தி (எ) வைத்தியநாதன் இவரது சகோதரர் ஸ்ரீதர் சீனிவாசன். இவர்களது சகோதரி மகன்கள் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரசாதம் விற்பனை செய்யும் ஸ்டால் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்தி மற்றும் ஸ்ரீதர் சீனிவாசன் ஆகியோர் தங்களது சகோதரி மகன்களுக்கு கடனாக ரூபாய் 2 கோடி வழங்கி உள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொடுத்த பணத்தை வைத்தி திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாது என்றும், தாங்கள் வாங்கியதற்கு தகுந்த ஆதாரம் கிடையாது என தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருவானைக்காவல் அருகே ஸ்ரீதர் சீனிவாசன் மற்றும் சகோதரர் வைத்தி ஆகியோரை நேரில் வர சொல்லி, பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினர் இருவரையும் கத்தி, அரிவாள் கொண்டு பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் சீனிவாசன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சகோதரர்கள் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலிப்படையை சேர்ந்த அன்பு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 2491

0

0