மாமனார், மாமியார் டார்ச்சர்… மனைவியை அடித்துக் கொன்ற கணவர் ; பெண்ணின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 12:47 pm
Quick Share

வேலூர் அருகே பெண்ணை துன்புறுத்தி அடித்து கொலை செய்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணி – முனியம்மா தம்பதியினரின் 2வது மகள் லட்சுமி. இவர்களது உறவினர்களான காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த வன்நேந்திரன் – அன்பு என்பவரின் மகனான ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தை என 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக தகவல் அறிந்த அவரது உறவினர்கள் நேரில் சென்று பார்த்த போது, லட்சுமியின் உடலை அப்புறப்படுத்தியுள்ளனர். திருமணம் ஆன நாளில் இருந்து லட்சுமியை அவரது கணவர் ராஜேசும், மாமனார், மாமியாரும் துன்புறுத்தி வந்ததாகவும், இவர்கள் தான் நேற்று லட்சுமியை அடித்து மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால், இறந்த லட்சுமியின் உறவினர்கள் இன்று மாலை திருமணியில் இருந்து விருதம்பட்டு செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மேலும் தங்களது மகள் லட்சுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2 பிள்ளைகளையும் தங்களிடம் ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Views: - 712

0

0