குட்டைக் கொம்பனின் தொல்லை… குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் : அச்சத்தில் மலைகிராம மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 1:31 pm
Dgl Elephant - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் மலைகிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஆடலுர், பன்றிமலை, கே.சி. பட்டி, பாச்சலூர், சோலைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, குப்பம்மாள் பட்டி, அமைதி சோலை, உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இப்பகுதிகளில் ஒற்றை யானை மற்றும் 9க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதி, போக்குவரத்து நிறைந்த மக்கள் செல்லும் சாலைகள் மற்றும் குடியிருப்பை ஒட்டிய மலை பகுதியிலும் யானைகள் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மக்களை அச்சுறுத்தி வந்த குட்டை கொம்பன் என்ற ஒற்றை யானையை பிடிக்க டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 கும்கி யானைகள் இதுவரை ஒற்றை யானையை விரட்டவில்லை.

இந்நிலையில் நேற்று கே.சி.பட்டி, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் யானை கூட்டம் குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், இன்று அதிகாலை சோலைக் காடு மலை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை கூட்டம் உலா வந்தது.

அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த உயிர் பயத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் மற்றும் தமிழக அரசும் உடனடியாக செயல்பட்டு இந்த காட்டு யானை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 621

0

0