பிறந்தநாளன்று வெளியே வருவாரா சவுக்கு சங்கர்? மீண்டும் புதிய வழக்கை கையில் எடுத்தது காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 4:20 pm
Savukku - Updatenews360
Quick Share

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஊடகங்களில், யூடியூப் சேனல்களில் அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வைந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. புகழேந்தி அவர்வு சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து, சவுக்கு சங்கர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சடுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை சவுக்கு சங்கருக்கு விதித்த 6 மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

இதனால், சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளின் கீழ் கடந்த 11-ம் தேதி சவுக்கு சங்கரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றம், மத்தியக் குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு அவர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது நிபந்தனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனால் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீதான மற்றொரு வழக்கை மத்திய குற்றப்பிரிவு கையில் எடுத்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய மகாலட்சுமி என்பவர் காவல்நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்துள்ளார்.

சவுக்கு வலைதளத்தில் உள்ள கட்டுரையில், தன்னை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்துள்ளதாவும், நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக கடலூர் சிறையில் இருந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் மீண்டும் கைதாவாரா? அல்லது விடுதலையாவாரா என்பது சிறிது நேரத்தில் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. சவுக்கு சங்கருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Views: - 305

0

0