நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்… இரு குழந்தைகளோடு பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..

Author: Babu Lakshmanan
14 May 2022, 7:11 pm
Quick Share

திருவாரூர் அருகே கணவர் நடத்தையில் சந்தேகப்பட்ட தால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகிலுள்ள கடம்பங்குடி என்கிற கிராமத்தில் விஜய் என்பவரின் மனைவி அனுப்பிரியா (32). இவர்களுக்கு பாலஸ்ரீ (11) மதுஷா (7) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 31 வயதான விஜய் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவி அனுப்பிரியா விற்கும் போனில் சண்டை நடந்து வந்ததாக தெரிகிறது. 

அனுப்பிரியா புதுக்கோட்டை மாவட்டம் கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் என்றும், இரண்டு மாதத்திற்கு முன்பு தான் இங்கு வந்து வாடகை வீட்டில் குடி இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.தம்பதிகள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

விஜய் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி போனில் தகராறில் ஈடுபட்டு திட்டியதாக அனுப்பிரியா கூறியிருக்கிறார். இதனால் மனமுடைந்த அனுப்பிரியா வீட்டிலிருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை தானும் அருந்திக் கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது குழந்தைகள் இருவரும் ஆபத்தான நிலையில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அனுப்பிரியாவின் செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் இருவரும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 680

0

0