ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மொத்தம் ஏழு ; திரைப்பட பாணியில் குளங்களை காணவில்லை என இளைஞர் புகார் ; கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 1:48 pm
Quick Share

திருவள்ளூர் :கிணற்றைக் காணவில்லை என்று திரைப்பட பாணியில் ஏழு குளங்களைக் காணவில்லை என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் பதாகை ஏந்தி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் உள்ள ஏழு குளங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து பலமுறை வட்டாட்சியர் முதற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் ஆக்கிரமிப்பு குறித்த எச்சரிக்கை பெயர் பலகை வைத்த பிறகும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

ஏழு குளங்களை காணவில்லை எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையோடு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை பொன்னேரி சாராட்சியர் அலுவலக ஊழியர்கள் சாராட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து விசாரித்த சாராட்சியர் ஐஸ்வர்யா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இச்சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Views: - 312

0

0