கொலையாளியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு… ஓயவே ஓயாத டார்ச்சர் ; ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 4:25 pm
Quick Share

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பறக்கையை சேர்ந்தவர் கண்ணன் (28). இவருக்கும், கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட வாலிபர் ஒருவரின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, கண்ணன் அந்த பெண்ணுடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் வீடு எடுத்து குடியிருந்து வருகிறார். இதனிடையே, இந்த பெண்ணுக்கும் கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததால் இருவரும் பிரிந்து விட்டதாகவும், கண்ணன் கஞ்சா உபயோகித்து விட்டு அந்தப் பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்ததாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் நேற்று மாலை கண்ணனை காவல் நிலையம் அழைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கண்ணன் திடீரென தனது கையில் இருந்த கத்தியால் கழுத்தை இரண்டு முறை அறுத்து தற்கொலைக்கு முயன்ற போது மயங்கி விழுந்தார். அவரை நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் ஆகியோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 851

0

0