ஜாக்கிரதை..! அப்பா அம்மா சேமித்த பணத்தை ஆன்லைனில் போயும் போயும் “அதற்காக” பறிகொடுத்த மதுரை சிறுவன்
20 September 2020, 3:49 pmமதுரை: ஊரடங்கின் காரணமாக அதிகமாக ஆன்லைன் கேம் விளையாடி வந்த 12 வயது சிறுவன் ரூ.90,000 ஆன்லைன் கேமிற்குச் செலவிட்டது அவனது பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஊரடங்கின் போது ஆன்லைன் கேம்களை விளையாடத் தொடங்கிய சிறுவன் தனது அம்மாவின் ATM கார்டை பயன்படுத்தி ஆன்லைன் கேம்களில் பணத்தை தண்டமாக செலவழித்துள்ளான். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் மேலகிடாரம் பகுதியில் நடந்துள்ளது.
12 வயது சிறுவனின் தாய் பணம் எடுக்க ஏடிஎம் சென்று இருப்பை சரிபார்த்த போதுதான் சிறுவன் செய்த வேலைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆன்லைன் கேமிங்கிற்கு அச்சிறுவன் அடிமையாக இருப்பது சிறுவனின் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. இருந்தாலும், கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாததால் அவன் பெற்றோரும் விளையாடுவதற்கு அனுமதித்ததால், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுவனின் தந்தை குமார் ஒரு இ-சேவை மையத்தை நடத்தி வருகிறார். குமாரின் மனைவி ஆன்லைனில் பொருட்கள் வாங்க தன் மகனிடம் தான் கேட்பார். இதை பயன்படுத்திக்கொண்ட சிறுவன் ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டான், மேலும் ஏடிஎம் கார்டுக்கான தகவலும் அவனுக்கு தெரிந்திருந்திருக்கிறது. இதனால், ஆன்லைனில் கேம் விளையாடும்போது வங்கிக் கணக்கில் இருந்த 97,000 ரூபாயிலிருந்து ரூ.90,000 செலவிட்டுள்ளான். பணம் எடுத்த பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கி அனுப்பிய SMS களையும் பெற்றோருக்கு தெரியாமல் நீக்கிவிட்டான். ஆரம்பத்தில், சிறுவன் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தவில்லை என்றாலும், பின்னர் ஒப்புக்கொண்டுள்ளான்.
எனவே, உங்கள் குழந்தைகளும் கேம்களை விளையாடுபர்களாக இருந்தால் அவர்களிடம், வங்கி விவரங்களைக் கொடுக்காமல் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஆன்லைன் கேம் விளையாடுவது தவறில்லை, அடிமையாகும் அளவுக்கு விளையாடும்போதும் குழந்தைகளைக் கண்டிக்காமல் இருப்பதுதான் தவறு. இந்த தகவலை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, நீங்களும் வருமுன் காத்துக்கொள்ளுங்கள்.