சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… திமுக இன்று ஆலோசனை…. நாளை வேட்பாளர்களை தேர்வு செய்கிறது பாஜக…!!

Author: Babu Lakshmanan
27 January 2022, 10:51 am
Quick Share

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனையை நடத்துகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. பிப்.,19ம் தேதி வாக்குப்பதிவும், பிப்.,22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதோடு, மார்ச் 4ம் தேதி மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், அதிமுக, திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக, அமமுக உள்ளிட்ட பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலை போன்று, ஆளும் திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் கட்சியின் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிக இடங்களை திமுகவிடம் கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே, திமுக இது பற்றியும் முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

இதேபோல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டு வரவேண்டிய கட்டாயத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உள்ளது. இந்த நிலையில், சென்னை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியினர் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இதில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்படவுள்ளது.

Views: - 1589

0

0