4 பேர் உயிரை காவு வாங்கிய தீவிபத்து…ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் விபரீதம்: பெங்களூருவில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
8 April 2022, 8:29 pm
Quick Share

பெங்களூரு: விஜயநகர மாவட்டத்தில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஹோஸபேட்டே தாலூகாவின் மாரியம்மன ஹள்ளியின் கிராமத்தை சேர்ந்த வெங்கட் பிரஷாந்த் (42), இவருடைய மனைவி சந்திரகலா (38) , மற்றும் இவர்களின் மகன் எஸ் ஏ அர்த்விக் (16) மற்றும் மகள் ப்ரேரனா (8) ஆகியோர் ராகவேந்திரா ஷெட்டி என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை அளவில் திடீரென ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு மற்றும் ஏசி வெடித்ததில் வீடு முழுக்க தீ பற்றிக்கொண்டு கரும் புகை சூழ்ந்தது. இந்த தீயை கண்டவுடன் ராகவேந்திரா ஷெட்டி மற்றும் அவருடைய மனைவி ராஜஸ்ரீ இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

ஆனால் வெங்கட் பிரஷாந்த் மற்றும் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிருடன் எறிந்தது நெஞ்சை பதற வைத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹோஸபேட்டே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குளிர்சாதனப்பெட்டி வெடித்ததால் விஷ வாயு கசிந்ததா அல்லது தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த விபத்து குறித்து மரியம்மன ஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 627

0

0