எப்படி இந்த தைரியம் வந்துச்சு… திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமே இல்லை… அண்ணாமலை காட்டம்!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 5:03 pm
Quick Share

சென்னை : திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமே இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை – சுத்தமல்லியை அடுத்துள்ள பழவூர் கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களை வரவேற்று பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்ற காவல் துறையினர் முயன்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் உடனிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த காவலர் மார்கரெட் தெரசாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமே இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- திருநெல்வேலி, பழவூர் எஸ்ஐ மார்க்ரெட் தெரசா அவர்களை கயவர்கள் கழுத்தறுத்து கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள்.காவல்துறையினர் மீது கயவர்களுக்கு எந்தவிதமான பயமும் திமுக அரசில் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக இது காட்டுகிறது!. அவர் விரைந்து குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 654

0

0