தன்னைத்தானே தகவமைத்து கொண்டவர் அஜித்… தந்தையை இழந்து வாடும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை..!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 10:44 am
Quick Share

பிரபல நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு பல்வேறு அரசியல் திலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். ஐதராபாத்தில் தந்தை சுப்பிரமணியம் – தாய் மோகினிக்கு மகனாக 1971ல் பிறந்தார்.

ajith

தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த அஜித் தன் தாய் தந்தையரை சென்னையில் வைத்து பார்த்து வந்தார். இதனிடையே நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென இன்று காலை 4:30 மணி அளவில் காலமானார். இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அஜித்தின் தந்தை உடல் ஈசிஆரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது. பின்னர், பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இதனிடையே, அஜித்குமாரின் தந்தை மரணத்திற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்,” என தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தில், “தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 363

0

0