மரபுகளை மீறிய சபாநாயகர்… முதலமைச்சர் ஸ்டாலின் மீது உரிமை மீறல் ஏன் கொண்டு வரக்கூடாது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 1:07 pm
Quick Share

சென்னை : தமிழக அரசு தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட மசோதா மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பேசி முடித்த பின்னர், பன்னீர்செல்வத்தை பேச அழைத்தது சட்டப்பேரவை ஜனநாயக மரபுகளை சீர்குலைக்கும் விதம் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் அதிமுகவின் தொகுதி அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் அஜித்குமாரின் தந்தை இறப்புக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் சூதாட்டம் மசோதா தாக்கல் செய்த பொழுது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பன்னீர் செல்வத்தையும் பேச அழைத்தார் பேரவை தலைவர். ஆளும் கட்சி கொண்டுவரும் மசோதா மீது ஒரு கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பேச அனுமதி உண்டு என்ற மரபுகளை மீறி, பன்னீர் செல்வத்தை பேச அழைத்து உள்ளீர்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், முன்னாள் பேரவை தலைவருமான டி. ஜெயக்குமார், தமிழக அரசு கொண்டுவரும் மசோதா மீது ஒரு கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற மரபு விதி இருப்பதாகவும், கூடுதலாக பன்னீர் செல்வத்தை பேரவை தலைவர் பேச அழைத்தது ஜனநாயகம் மரபுகளை சீர்குலைக்கும் செயல் என்றார்.

முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில், பேசுவதற்கு வாய்ப்பு அளித்தேன் என பேரவை தலைவர் அளித்த விளக்கம் ஏற்புடையது அல்ல என்றும், ஒரே கட்சியில் மூன்று, நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்க முடியுமா என்றும் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதிமுக அல்லாத உறுப்பினராக தான் பன்னீர்செல்வம் பேசினார் என்றால், இறுதியில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட மசோதாவை வரவேற்பதாக சொன்ன பன்னீர்செல்வத்தின் வார்த்தையை அவை குறிப்பில் இருந்து பேரவை தலைவர் நீக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் அதிமுக கிளை செயலாளர் என்று தவறான தகவலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் கொடுத்துள்ளதற்கு, அவர் மீது ஏன் உரிமை மீறல் கொண்டு வரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், நீதிமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவும் போது, மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். தவறான செய்தியை வெளியிட்டதாக தினமலர் பத்திரிகை மீது உரிமை மீறல் கொண்டு வந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்த பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் திமுக அரசு கொடுத்துள்ள எச்சரிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பற்றிய கருத்துக்களை தெரிவித்து வரும் சசிகலாவுக்கு எவ்வித தார்மீக அடிப்படை உரிமையும் இல்லை என்றும், திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் போது அவர்கள் திமுக கூட்டணியை விட்டு விலகி விடுவார்கள் என்றும் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

Views: - 289

0

0