பொதுக்குழு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு… ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த இபிஎஸ்… 11ம் தேதி மகுடம் சூடுகிறார்..?

Author: Babu Lakshmanan
6 July 2022, 12:54 pm
Quick Share

பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு, ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், அடுத்த பொதுக்குழு குறித்த அவரது அறிவிப்பும் நீதிமன்ற அவமதிப்பு என பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த வாரம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த முறை விசாரணையின் போது, ஓபிஎஸ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்..? எனவே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது, என்று கூறினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, குஷியான இபிஎஸ் தரப்பினர், பொதுக்குழுவுக்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, பொதுக்குழுவுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், நிர்வாகிகளின் ஆதரவை பன்னீர்செல்வம் இழந்துவிட்டதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும், என வாதிட்டார்.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும் என்றும், உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எல்லை மீறி நடந்து கொண்டது, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளிக்கும் தீர்மானங்களை மட்டும் தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியும் என்றும், உச்சநீதிமன்ற வழக்கால் உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணை பாதிக்கப்பட கூடாது, என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தனி நீதிபதி தெளிவாக கூறியுள்ளதாகவும், பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

மேலும்,அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தது ஏன்..? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், நட்போ சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்றும், உங்கள் கட்சி தொடர்பான எல்லா பிரச்னைகளை பொது குழுவில் விவாதியுங்கள் என்று அறிவுறுத்தியதுடன், பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது என்றும், இந்த விவகாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதோடு, வரும் 11ம் தேதி நடக்கும் அதிமுக.,வின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்றும், கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினர். மேலும், ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுவதாகக் கூறிய நீதிபதிகள், ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தை நாடலாம், என்று அதிரடியாக தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டதால், வரும் 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமையை ஏற்பது உறுதியாகிவிட்டது.

Views: - 638

0

0