மக்களை சந்திக்க ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது… திமுகவின் டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து எம்ஆர் விஜயபாஸ்கர் பேச்சு

Author: Babu Lakshmanan
15 February 2022, 9:07 am
Quick Share

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வராதது குறித்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து ஆங்காங்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர், குளித்தலை நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் காணொளி காட்சி மூலமாகவே, பிரச்சாரம் மேற்கொள்கின்றார். அவரது மகனும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மட்டுமே தமிழக அளவில் பிரச்சாரம் செய்து வருகிறார். கொரோனா காரணம் கூறி டிவிக்கு முன்னர் அமர்ந்திருக்கிறார். ஏனென்றால், அவரது மகன், ஓரிரு தினங்களுக்கு முன்பு கரூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது, இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 எங்கே என்று கேட்டு உள்ளனர். அதற்கு நான்கு வருடங்கள் இருக்கே என்று கூறிச் சென்றுள்ளார்.

நீட் தேர்வு ரகசியம் கரூரில் வந்து சொன்ன உதயநிதி, கடைசி வரை போராடுவது மட்டுமே நீட் தேர்வின் ரகசியம் என்று கூறியுள்ளார். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், கேஸ் சிலிண்டருக்கு மானியம், அரசு ஊழியர்களுக்கு ஒரே பென்சன் திட்டம் வழங்கப்படும் என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தார் மு க ஸ்டாலின். ஆனால் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலைதான் தற்போது வரை தொடர்கிறது.

இது மட்டுமில்லாமல் ஏழை எளிய மக்கள், வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று எண்ணத்துவங்கியுள்ளனர். தோல்வி பயத்தினால் மட்டுமே நகரமைப்பு உள்ளாட்சித் தேர்தலை திமுக தள்ளிப்போட்டு வந்ததும், ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு தேர்தலை நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் நடைபெற உள்ளது, எனக் கூறினார்

Views: - 775

0

0