திமுகவுக்கு எதிராக கைகோர்த்த தோழமை கட்சிகள் : புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி… ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 6:29 pm
New Alliance Against Stalin - Updatenews360
Quick Share

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளின் உள்ள 811 பதவிகளுக்காக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீடு நடைபெற்று வருகிறது.

இதில் அதிமுக 93 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தல் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் அதிகளவில் திமுக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்து கூட்டணி கட்சிகள் பல்வேறு இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. அதன் படி கண்ணம்பாளையம் பேரூராட்சியில் திமுகவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தனிக்கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ளனர்.

கண்ணம்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்து, கண்ணம்பாளையம் மக்கள் சேவை முன்னணி என பெயரிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் களமிறங்க இடம் கிடைக்காதவர்கள் ஒன்று சேர்ந்து தனியாக கூட்டணி அமைத்து திமுகவை எதிர்கொள்கின்றனர்.

இது குறித்து அக்கூட்டணியினர் பேசிய போது, சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை கதி கலங்க வைத்தவர்கள் கண்ணம்பாளையம் தியாகிகள், அவர்களின் உண்மையான வாரிசுகளாக கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்றத் தேர்தலில் கமிஷன் வாங்குபவர்களை களை எடுக்கவும், ஊழல் செய்தவர்களின் தோளை உரிக்கவும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திமுக போதிய இடங்கள் ஒதுக்கவில்லை என்றும், சில கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடங்களை கூட தர முன்வரவில்லை. ஆனால் கண்ணம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வலுவான வாக்குகளை கொண்டுள்ளதாகவும், அதனால் இடதுசாரிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இணைந்து மக்கள் சேவை முன்னணி என் கூட்டணியை உருவாக்கியுள்ளது என தெரிவித்தனர்.

கோவையில் பல இடங்களில் திமுக தலைமையின் முடிவை எதிர்த்து திமுகவினரே மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட வரும் நிலையில், திமுகவின் தோழமை கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக அமைத்து திமுகவை எதிர்த்து போட்டியிட உள்ளது திமுகவினரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மக்கள் சேவை கூட்டணி மக்களுக்கான கூட்டணியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Views: - 1283

0

0