பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர கருணாநிதிதான் காரணமா..? அமைச்சர் பொன்முடியை மடக்கிய அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 6:15 pm
Quick Share

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்றும், மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் நுழைவுத்தேர்வை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்ததாகவும் கூறினார். இதன்மூலம், 25,000 ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை 77 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது கூற்றுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.

திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்திற்கு வரும் முன்பே தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளதாகக் கூறிய அண்ணாமலை, அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது :- அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையிலும்‌ அரசியல்‌ தமிழகத்தின்‌ உயர்கல்வித்துறை அமைச்சர்‌ திரு பொன்முடி அவர்கள்‌ இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழாவில்‌ சில கருத்துக்களை முன்வைத்தார்‌. அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின்‌ கடமையாக கருதுகிறோம்‌.

தமிழகத்தில்‌ உயர்கல்வி பயிலும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்‌ அதிகம்‌ என்றார்‌. உண்மைதான்‌. அது இன்று மட்டுமல்ல, 1967 க்கு பின்பு மட்டுமல்ல, ஆயிரம்‌ ஆயிரம்‌ ஆண்டுகளாக அறிவாற்றலில்‌ முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்‌ நமது முன்னோர்கள்‌. மேற்கத்திய கல்வி முறையே தமிழகத்தின்‌ கல்வியின்‌ தொடக்கம்‌ என்று நம்பும்‌ சிலரின்‌ கவனத்திற்கு; 1800களின்‌ தொடக்க காலத்திலேயே, திராவிடம்‌ என்ற வார்த்தை புழக்கத்தில்‌ வருவதற்கு முன்பே, தமிழகத்தில்‌ அனைத்து சமுதாய மக்களும்‌ கல்வி பயின்று வந்துள்ளனர்‌ என்பதற்கான சான்று உள்ளது.

ஆனால்‌ இன்றோ, தமிழகத்தில்‌ பொறியியல்‌ பயின்று வரும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர்‌ மறுக்க மாட்டார்‌ என்று நம்புகிறோம்‌. தேர்ச்சி பெறுவோர்‌ எண்ணிக்கையும்‌ குறைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ 2016ஆம்‌ ஆண்டு 1,65,417 மாணவர்கள்‌ தேர்ச்சி பெற்றனர்‌. 2020ஆம்‌ ஆண்டு அது 85,747 ஆக குறைந்துவிட்டது. சுமார்‌ 50 சதவீத விழ்ச்சி.

மேலும்‌, 2021 ஆம்‌ ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல்‌ கல்லூரிகளுக்கான செமஸ்டர்‌ தேர்வில்‌ வெறும்‌ 38% மாணவர்கள்‌ மட்டுமே அனைத்து பாடங்களிலும்‌ தேர்ச்சி பெற்றதாக செய்திகள்‌ வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பொறியியல்‌ கல்லூரியில்‌ நுழைவோர்‌ எண்ணிக்கையில்‌ மட்டுமே கவனம்‌ செலுத்தி வருவதன்‌ வெளிப்பாடாகவே இது தெரிகிறது.

தனது உரையை முடிக்கும்‌ போது உயர்கல்வித்துறை அமைச்சர்‌ திரு பொன்முடி அவர்கள்‌ தமிழகத்தின்‌ கல்வி மேம்பாட்டிற்கு நமது பாரத பிரதமர்‌ திரு நரேந்திர மோடி அவர்கள்‌ உதவ வேண்டும்‌ என்று கேட்டுக்கொண்டார்‌.

தமிழகத்தில்‌ கல்வி தரத்தை உயர்த்தவும்‌, அனைத்து பிள்ளைகளுக்கும்‌ கல்வி சென்றடையவும்‌ சமகிர சிக்ஷா நிதி மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில்‌ மட்டும்‌ ரூபாய்‌ 6,664 கோடி ரூபாய்‌ நமது மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதை பணிவன்புடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. 2015 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2021 ஆம்‌ ஆண்டு வரை தமிழகத்தில்‌ 3,96,942 மாணவர்களுக்கு 814 திட்டத்தின்‌ மூலமாக திறன்‌ மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல்‌ தகவல்‌.

மீண்டும்‌ ஒருமுறை, எண்ணிக்கையில்‌ மட்டுமே கவனம்‌ செலுத்தாமல்‌ தரத்திலும்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்பதை தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக்‌ கொள்கிறோம்‌!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 441

0

0