போடாத சாலைக்கு ரூ.5 கோடி பில்… ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்த அதிகாரிகள்… நடவடிக்கை எடுக்காதது ஏன்..? சிக்கலில் அமைச்சர் எ.வ.வேலு..?

Author: Babu Lakshmanan
7 October 2022, 4:21 pm
Quick Share

சாலை போடாமலேயே ரூபாய் 5 கோடி பணத்தை ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பட்டுவாடா செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களுடன் நாளை (நேற்று) அறப்போர் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெடுஞ்சாலைத்துறையில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பதாகவும், 6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், இது குறித்து கூடுதல் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையில் சமர்ப்பித்துள்ளதாகவும், இது குறித்து ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை எப்ஐஆர் பதிவு செய்யாத நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எ.வ வேலு பதில் சொல்வாரா..? என்று அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கில் சாலை போடாமலேயே ரூ 5 கோடி சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மார்ச் 2022-ல் பணம் கொடுத்து ஊழல் நடந்தது. இதன் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏப்ரல் 20 புகார் அளித்தது. தற்பொழுது கூடுதல் முக்கிய ஆதாரங்களை சமர்பித்துள்ளது. மேலும் துறை ரீதியான விசாரணை செய்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

6 மாதங்கள் ஆகியும் இதுவரை FIR கூட பதிவு செய்யப்படவில்லை. அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக மேலும் பல ஆதாரங்களை திரட்டியது. இதை முதன் முதலில் வெளி கொண்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை செயலரிடம் புகார் கொடுத்தார். சாலை போடாமலேயே பணம் கொடுத்தார்கள் என்ற அவரது குற்றச்சாட்டு உண்மை என்று கண்காணிப்புக்கு பொறியாளர் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்ததின் அறிக்கை நகலினை RTI இல் பெற்று அறப்போர் தற்பொழுது லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதை அனுப்பி உள்ளது.

மேலும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் தரச்சான்று கோட்ட பொறியாளரிடமிருந்து தரச்சான்று பெற்ற பின்பே ஒரு சாலைக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சாலையின் தரம் சோதனை செய்யப்படவில்லை என்றும் அதற்கான எந்த சான்றும் வழங்கப்படவில்லை என்றும் தரச்சான்று கோட்ட பொறியாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கொடுத்த ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறையில் சமர்ப்பித்துள்ளது.

மார்ச் மாதம் சாலை போட்டது போல தயாரிக்கப்பட்ட போலி M BOOK நகல் மற்றும் பில் செலவினங்கள் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் சமர்ப்பித்துள்ளோம். ஊழல்வாதிகளை காப்பாற்ற DSP தலைமையில் பந்தோபஸ்து கொடுத்து ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காகவும் சங்கரானந்த் இன்ஃப்ரா மற்றும் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக ஏப்ரல் மாதத்தில் சாலை போட்டதற்கான ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் சமர்ப்பித்துள்ளோம்.

மேலும் நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை போடப்பட்ட கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு டெண்டர்களில் மொத்தம் 163 கோடியில் 110 கோடி ரூபாய்க்காண டெண்டர்கள் சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா விற்கு மட்டும் வழங்கப்பட்டதன் ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சமர்ப்பித்துள்ளோம். அதாவது 68 % டெண்டர்கள் ஒருவருக்கு பொய் இருக்கிறது. அந்த ஒப்பந்ததாரர் தான் இந்த ஊழலில் ஈடுபட்டவர்.

உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக இதுவரை அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த 17B சார்ஜ் கொடுக்கப்படவில்லை என்றும் அறிகிறோம்.

மேலும் ஒரு சில உயர் பொது ஊழியர்கள் ஊழல்வாதிகளுடன் கூட்டு சதி செய்து அந்த ஊழல்வாதிகள் நீதிமன்றம் சென்று தங்கள் மீது பணியிடை நீக்கத்திற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி தங்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வழிவகை செய்வதற்காக இந்த கூட்டு செய்தி செய்யப்படுவதாக அறிகிறோம். நடவடிக்கை எடுப்போம் என்று சூளுரைத்த அமைச்சர் எ.வ வேலு ஏன் FIR மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை விவரிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும் வரை அறப்போர் தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 611

0

0