அடுத்தடுத்து திருப்பம்… அதிமுகவில் இணைந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி.. அதிர்ச்சியில் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 8:48 pm
Quick Share

திண்டுக்கல் : பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், அதிமுக – பாஜகவினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருகட்சியினரும் பரஸ்பரமாக வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகவே தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், பழனியை சார்ந்த பாஜக முக்கிய நிர்வாகி பொன். கந்தசாமி கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர் பழனியை சார்ந்த காணியாளர் பண்ணாடி ராஜா என்கிற பொன்.கந்தசாமி. கடந்த பல வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பொன்.கந்தசாமி கட்சி பணியாற்றி வந்தார். சமீப காலமாக உள்ளூர் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கந்தசாமியை அழைக்காமல் மாவட்டச் செயலாளர் கனகராஜ் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் மாவட்ட செயலாளர் கனகராஜ் மற்றும் பொன். கந்தசாமி இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சென்னை பசுமைவழிச்சாலையிலுள்ள இல்லத்தில் நேரில் சந்தித்த பொன். கந்தசாமி, தன்னை அ.இ.அ.தி.மு.கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுகவில் இணையக்கூடிய சம்பவங்களால் தமிழக பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

Views: - 304

0

0